Pages

தோஷங்கள் போக்கும் விஷமங்களேஸ்வரர்


 

துடையூர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடப் பெற்ற சிவாலயங்கள் திருமுறைத் தலங்கள் என்று போற்றி வழிபடப்படுகின்றன. இவற்றைத் தவிர சமயக் குரவர்கள் நேரில் செல்லாமலேயே பாடி வைத்துள்ள தலங்கள் வைப்புத் தலங்கள் எனப்படுகின்றன. அப்படி திருநாவுக்கரசரால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலம், துடையூர். அப்பர் பெருமான், ‘பிறையூரும் சடைமுடியும்’ என்று துவங்கும் பாடலில் ‘துறையூரும் துவையூரும் தோழூர் தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே’ என்று குறிப்பிட்டுள்ளார். விஷமங்களேஸ்வரர் கொலுவிருக்கும் இந்த ஆலயம் சிறியதுதானென்றாலும் மிக அழகிய, நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, அரிய சிலைகளைக் கொண்டு, சோழர் காலத்திய சிற்பிகளின் கலைத் திறனை எடுத்துக்காட்டும் உன்னதமான கலைக்கூடமாக விளங்குகிறது.

இந்தத் துடையூர், தற்போது தொடையூர் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. சாலையின் இடப்புறம் கோயிலும் வலப்புறம் அழகிய சிறிய கிராமமும் அமைந்துள்ளன. ஐயன் ஆற்றின் தென்கரையில் கோயில் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வாய்க்கால் பாலத்தைத் தாண்டி இடப்புறமா கத் திரும்பிச் சென்றால் ஆலயத்தை அடையலாம். முதலில் நம் கண்களில் தென்படுவது ஊரின் காவல் தெய்வமான கலிங்காயி அம்மன் ஆலயம். இதை அடுத்து விஷமங்களேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அக்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்திருந்த பகுதியாதலால் இறைவன் கடம்பவனேஸ் வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் சிவபெருமான் உயரமான பாணத்துடன் காட்சி தருகிறார்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றிய சிவபெரு மான் கொடுமையான விஷத்தையே மங்களமாக மாற்றியதால் விஷமங்களேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவியின் பெயரும் மங்கள நாயகி. இவர்களை வழிபட அனைத்து மங்களங்களும் கிட்டும் என்பது உறுதி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு, ஜோதிடக் கலையில் தலை சிறந்த நிபுணனாகத் திகழ்ந்தான். துரியோதனின் மனைவி பானுமதி இத்
தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அசல நிசுமித்ர மகரிஷி, இன்றும் தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வருவ தாக ஐதீகம் உண்டு.

கருவறையின் இரு மருங்கிலும் சுமார் எட்டு அடி உயரத்தில் துவாரபாலகர்கள் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகின்றனர். கிழக்கு நோக்கிய கரு வறையில் விஷமங்களேஸ்வரர் லிங்க உருவில் அருள்பாலிக்க, மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி மங்கள நாயகியின் சந்நதி அமைந்துள்ளது. ஆலயத்திற்குள் நுழையும் போதே இடப்புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன், பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய- சந்திரர்கள் காட்சி தருவர். இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிய அமைப்பாகும். சூரியபகவான் திருமால் அம்சமாக, சூரிய நாராயணர் என்றே போற்றப்படுகிறார்.

கருவறையை வலம் வரும்போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்தி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். பின் னிரு கரங்களில் மான், மழு ஏந்தி, முன்னிரு கரங்களால் வீணையை மிட்டி அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த் தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவர் ‘திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி’ எனப்படுகிறார். லால்குடி சப்தரிஷீஸ்வ ரர் ஆலயத்திலும் இதேபோன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திரு மேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியை தரிசிக்கலாம். சிவபெருமான், வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடதுகையால் பார்வதி தேவியை அணைத்தபடியும் அபூர்வமாக காட்சியளிக்கிறார்.

ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டுவிரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்று நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது, இச்சிலை. இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து மேற்கே, தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர், கருவறையின் வட கோஷ்டத்தில் பிரம்மா, சரஸ்வதி, துர்க்கை சந்நதிகள் உள்ளன. அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது. நல்ல வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், ஒவ்வொரு திரு வோண நட்சத்திரத்தன்றும் பாம்புப் புற்றுக்கு உரித்தான விஷ்ணு நட்சத்திர தேவதையையும் காளிங்கன்-சங்கம வள்ளி என்ற நாகதேவதையையும் வழி பட கல்விக்குரிய நிரந்தர பணி கிடைக்கும்.

மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுவத்தி ஆகிய பூஜைப் பொருட்களால் வழிபடுகிறார்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இத்தல இறைவியான மங்களாம்பிகையை செவ்வாய் தோறும் செவ்வரளி மலர் மாலைகள் சூட்டி வழிபட, தோஷங்கள் நீங்குகின்றன. பக்தர்கள் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கும் சடங்கை இங்குதான் நடத்துகின்றனர். ஆலயத்தின் கிழக்கே எழுந்தருளியுள்ள வாத முனீஸ்வரர், நரம்பு மற்றும் வாத சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் அற்புத சக்தி வாய்ந்தவராக வழிபடப்படுகிறார். அவ்வாறு நோயுற்றவர்கள் கோயில் முகப்பிற்கு எதிரேயுள்ள இவரை வழிபட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்கின்றனர். செவ்வாய், சனி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வாத முனிக்கு தைல அபிஷேகம் நடக்கிறது. பிரசாதமான அபிஷேகத் தைலம் தினமும் கோயிலில் பக்தர்களுக்கு கிடைக்கும். துடையூர், திருச்சி-சேலம் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.